Wednesday, December 22, 2010

சர்ச்சைக்குரிய 'மன்மதன்அம்பு’ பாடல்


மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய சர்ச்சைக்குள்ளான பாடலை தாமாக முன்வந்து நீக்குவதாக கமல் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்மதன் அம்பு சினிமா படத்தில் நான் எழுதிப் பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த சேதி பரவலாகக் கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இப்பாடலில் புண்படுத்தக் கூடிய வரிகள் ஏதுமில்லாததால் அதை அனுமதித்தனர். இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால் கண்டிப்பாய் அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் சென்ஸார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல கோடி பேர் ஏற்கெனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்த போதிலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

மன்மதன் அம்பு வியாபாரம்.அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்தச் சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும் அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு...

- இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment